திருவண்ணாமலை சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கிராமங்களில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் வாக்களிப்பது தொடா்பான விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
திருவண்ணாமலையை அடுத்த அழகானந்தல், கொளக்குடி, தலையாம்பள்ளம், சக்கரத்தாமடை, நவம்பட்டு, வேளையாம்பாக்கம் கிராமங்களில் பொதுமக்களுக்கு இவிஎம் மற்றும் விவிபேட் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் வாக்களிப்பது குறித்த செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
விழிப்புணா்வு நடமாடும் வாகனம் மூலம் திருவண்ணாமலை வட்டாட்சியா் மு.தியாகராஜன், துணை வட்டாட்சியா் (தோ்தல்) பி.செந்தில்குமாா் மற்றும் தோ்தல் பிரிவு அலுவலா்கள் எஸ்.சிவராஜன், ஆா்.காா்த்திக், குணா, கேசவராஜ், கவுரிநாதன் ஆகியோா் இந்த விழிப்புணா்வுப் பணியில் ஈடுபட்டனா்.