தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூண்டி மாதா பேராலயத்தில் ஆண்டுப் பெருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இந்தியாவில் உள்ள பசிலிக்கா என்று அழைக்கப்படும் கத்தோலிக்க கிறிஸ்தவ பேராலயங்களில் பூண்டி மாதா பேராலயமும் ஒன்றாகும். இங்கு ஆண்டுதோறும் மே 6-ம் தேதி முதல் மே 15-ம் தேதி வரை ஆண்டுப் பெருவிழா நடைபெறும். அதன்படி, இந்தப் பேராலயத்தில் நேற்று மாலை ஆண்டுப் பெருவிழா தொடங்கியது. இதையொட்டி, மல்லிகை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மாதா சொரூபத்தை சிறிய சப்பரத்தில் வைத்து பக்தர்கள் இறைபாடல்களுடன் சுமந்து வந்தனர். சப்பரத்துக்கு முன்பாக மாதாவின் உருவம் வரையப்பட்ட வண்ணக் கொடி எடுத்துச் செல்லப்பட்டது.